மூதாட்டியை கொன்று 16 பவுன் நகை கொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர்.
மூதாட்டி பிணம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 75). இவர், சங்கரன்கோவிலில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ராஜேஸ்வரி (65). இவருடைய மகன் ஜெயக்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் வசித்து வருகிறார். முல்லைநகர் வீட்டில் சந்திரனும், ராஜேஸ்வரியும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் சந்திரன் வெளியே சென்றுவிட்டார். ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் சாவியை வழக்கம் போல் அருகே உள்ள ராஜேஸ்வரியிடம் கொடுப்பதற்காக சென்றார். அப்போது, வீட்டுக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 16 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.
2 தனிப்படை அமைப்பு
இந்த படுகொலை குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ‘வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருந்ததை அறிந்த கும்பல் ஒன்று வீட்டுச்சுவர் ஏறி குதித்து புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று ராஜேஸ்வரியின் தலையில் கம்பு அல்லது இரும்பு கம்பி போன்ற ஏதோ ஒரு பொருளால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ராஜேஸ்வரி அணிந்து இருந்த 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு அந்த கும்பல், அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர். அரைகுறையாக எரிந்த நிலையில் உடலை அங்கேயே போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story