ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் மழை; 4 வீடுகள் சேதம்


ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் மழை; 4 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:00 PM GMT (Updated: 29 Oct 2019 7:50 PM GMT)

ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 4 வீடுகள் சேதம் அடைந்தன. மூலைக்கரைப்பட்டியில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராதாபுரம், 

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ராதாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 3 வீடுகளின் மேற்கூரை சூறைக்காற்றில் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. மேலும் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராதாபுரம் தாசில்தார் செல்வம் நேற்று காலை சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையில் அரசனார்குளம் ரஹ்மத்நகர் பகுதியில் நேற்று காலையில் பலத்த காற்றுடன் மழை தூறிக்கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று அங்கு நின்ற வேப்பமரம் சாலையில் சாய்ந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகர பஞ்சாயத்து ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story