நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேர் கைது


நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2019 10:15 PM GMT (Updated: 28 Oct 2019 8:38 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டாசு வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நிபந்தனைகளை விதித்தது.

தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் சிவந்திப்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்த இசக்கி பாண்டி பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்தார்.

இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்தனர். இதேபோல் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் வலதி, தங்கராஜ் ஆகியோர் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக அவர்களை தாழையூத்து போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

நெல்லை மாநகர பகுதியில் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Next Story