நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு


நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 7:31 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

வேலை நிறுத்தம்

மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று அறிவித்து உள்ளது. இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வங்கிகளை இணைப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

பணிகள் முடங்கின

இந்த வேலை நிறுத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் வங்கிகளின் 50-க்கும் மேற்பட்ட கிளைகளில் பண பரிவர்த்தனை அடியோடு முடங்கின. வங்கி அதிகாரிகள் பணிக்கு வந்து இருந்தும், ஊழியர்கள் வராததால் பணிகள் முடங்கின. வங்கிகள் வெளிச்சோடி காணப்பட்டன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை யொட்டி நெல்லையில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியவில்லை. பண பரிவர்த்தனையும் பாதிப்பு. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் நெல்லையில் உள்ள சில வங்கிகள் வழக்கம் போல் இயங்கின.

Next Story