பனவடலிசத்திரத்தில் விபத்து: மின்கம்பத்தில் மோதி தலைகீழாக தொங்கிய கார்


பனவடலிசத்திரத்தில் விபத்து: மின்கம்பத்தில் மோதி தலைகீழாக தொங்கிய கார்
x
தினத்தந்தி 30 Sep 2019 9:45 PM GMT (Updated: 30 Sep 2019 8:39 PM GMT)

பனவடலிசத்திரத்தில் தாறுமாறாக ஓடிய கார் மின்கம்பத்தில் மோதி தலைகீழாக தொங்கியது. இந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.

பனவடலிசத்திரம்,

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளியை சேர்ந்தவர் ஹரிகோபாலகிருஷ்ணன் (வயது 35). இவர் கேரளாவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது காரில், கேரளாவில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

கார் பனவடலிசத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது. மேலும் அந்த கார், உடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளில் சிக்கி தலைகீழாக தொங்கியது.

இதில் ஹரிகோபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story