வள்ளியூர் அருகே,மாமியார் தாக்கியதில் காயம் அடைந்த மருமகன் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


வள்ளியூர் அருகே,மாமியார் தாக்கியதில் காயம் அடைந்த மருமகன் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 12:34 AM GMT)

வள்ளியூர் அருகே மாமியார் தாக்கியதில் காயமடைந்த மருமகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சுப்புலட்சுமி (47). சுப்பிரமணியனின் அக்கா மகன் மாரியப்பன் (32). இவர் சுப்பிரமணியன் வீட்டில் தங்கியிருந்து பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு சாமான்கள் பழைய விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் மாரியப்பனுக்கும், சுப்புலட்சுமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தோட்டத்தில் வசித்து வந்தார். பின்பு சுப்பிரமணியன் இருவரையும் சமாதானம் செய்து தனது வீட்டில் மாரியப்பனை தங்க வைத்தார். இருந்தாலும் அவ்வப்போது சுப்புலட்சுமிக்கும், மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாரியப்பன் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது சுப்புலட்சுமி இரும்பு கம்பியால் மாரியப்பனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதுபற்றி வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மாரியப்பன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து சுப்புலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story