களக்காடு அருகே கந்துவட்டிக்காரர்கள் அவதூறாக பேசியதால் பெண் தற்கொலை


களக்காடு அருகே கந்துவட்டிக்காரர்கள் அவதூறாக பேசியதால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Sep 2019 10:15 PM GMT (Updated: 20 Sep 2019 8:31 PM GMT)

களக்காடு அருகே கந்துவட்டிக்காரர்கள் அவதூறாக பேசியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவருடைய மனைவி காந்திமதி (வயது 48). இவர் கூலி வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது சிலரிடம் அவர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அதற்கு வாரந்தோறும் அவர் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கந்துவட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கந்துவட்டிக்காரர்கள் சிலர் காந்திமதியை அவதூறாக பேசினார்களாம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காந்திமதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை காந்திமதி இறந்தார்.

இதுகுறித்து களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story