ஊருக்குள் புகுந்த காட்டுபன்றி கடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊருக்குள் புகுந்த காட்டுபன்றி கடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 10:00 PM GMT (Updated: 4 April 2019 5:32 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு பன்றி கர்ப்பிணி உள்பட 3 பேரை கடித்தது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு பன்றியை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் காட்டுக்குள் இருந்த காட்டுபன்றி ஒன்று ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே நாகப்பன் என்பவருக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும் பாபு என்பவரது மனைவி பானு (வயது 45) நேற்று காலை வீட்டின் முன்பகுதியில் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த காட்டு பன்றி பானு மீது பாய்ந்து அவரை தாக்கி கடித்தது. இதனால் நிலைகுலைந்து போன பானு, அருகே இருந்த பாத்திரங்களை எடுத்து காட்டுபன்றி மீது வீசினார். இதனையடுத்து காட்டு பன்றி அங்கிருந்து சென்றுவிட்டது.

பின்னர் அங்கிருந்த மதன் என்பவரது வீட்டுக்குள் காட்டுபன்றி புகுந்தது. அந்த வீட்டில் மதன் என்பவரது மனைவி சுவேதா (20) இருந்தார். இவர் 3 மாத கர்ப்பிணி ஆவார். இவரையும் அந்த பன்றி தாக்கி கடித்துவிட்டு ஓடிச்சென்றது.

மேலும் அந்த வழியாக வந்த பச்சையப்பன் (59) என்பவரையும் காட்டுபன்றி தாக்கியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்களும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பச்சையப்பனுக்கு லேசான காயம் என்பதால் அவர் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் தாசில்தார் குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் அடர்ந்த புதர் பகுதியில் பதுங்கி இருக்கும் ஒரு காட்டுபன்றி தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி உள்ள காட்டுபன்றியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்து உள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story