நெய்வேலி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


நெய்வேலி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 9:30 PM GMT (Updated: 14 Feb 2018 9:57 PM GMT)

என்.எல்.சி.யில் வேலை வழங்க கோரி நெய்வேலி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி

நெய்வேலியை அடுத்த தென்குத்து கிராமத்தில் என்.எல்.சி. சுரங்கம்-1 ஏ அமைந்துள்ளது. இங்கிருந்து வடலூர், சுரங்கம்-2 மற்றும் வெளியூர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நிலக்கரி ஏற்றிச்செல்லப்படுகிறது. அவ்வாறு ஏற்றிச்செல்லப்படும் லாரிகளில் இருந்து நிலக்கரி சாலைகளில் சிதறுகிறது. இவை அவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களில் சிக்கி நுண்ணிய துகள்களாக மாறுகின்றன.

காற்று வீசும் போது நிலக்கரி துகள்கள் அருகில் உள்ள வீடுகளில் படிந்து, பல வித நோய்களை உண்டாக்குவதாகவும், இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் லாரிகள் செல்லும் சாலையில் நிலக்கரி துகள்கள் பறக்காத வகையில் தண்ணீர் தெளிக்க வேண்டும், தென்குத்து கிராமத்தில் சுரங்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும்.

என்.எல்.சி. சுரங்கம்-1 ஏ விரிவாக்கத்துக்காக தென்குத்து பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முடிவை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தென்குத்து வழியாக நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், கிராம முக்கியஸ்தர்களை என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் அழைத்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story