மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2018 11:00 PM GMT (Updated: 21 Jan 2018 7:57 PM GMT)

அழகியபாண்டியபுரம் அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

பூதப்பாண்டி,

அழகியபாண்டியபுரம் அருகே உள்ள பெருந்தலைக்காடு தூவச்சிசட்டறை பகுதியை சேர்ந்தவர் ஆன்ரோஸ். இவருடைய மகன் சத்திகுமார்(வயது 28). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சத்திகுமார் நேற்று முன்தினம் இரவு, தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் திட்டுவிளைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் சத்திகுமார் வீடு திரும்பாததால் பெற்றோர் பதற்றமடைந்தனர்.

நேற்று அதிகாலை ஆன்ரோஸ், மகனை தேடிச்சென்றார். பெருந்தலைக்காடு காந்திகோணம் பகுதியில் சென்றபோது, சாலையின் ஓரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி கிடப்பதையும், அதன் அருகில் ஒரு வாலிபர் கிடப்பதையும் கண்டார். உடனே அருகில் சென்று பார்த்தபோது, தனது மகன் சத்திகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் திட்டுவிளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த சத்திகுமார் காந்திகோணம் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்திகுமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆன்ரோஸ் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story