"கேஎல் ராகுல் ஏன் அப்படி செய்கிறார் என புரியவில்லை" - சுனில் கவாஸ்கர்
சதமடித்த ராகுல் வழக்கம் போல இரு கைகளாலும் இரு காதுகளை பொத்தி அவரது சதத்தை கொண்டாடினார்.
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 199 ரன்கள் குவித்தது. கேப்டன் ராகுல் சதமடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய மும்பை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் சதமடித்த ராகுல், வழக்கம் போலவே இரு கைகளாலும் இரு காதுகளை பொத்தி அவரது சதத்தை கொண்டாடினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேஎல் ராகுல் பேட்டிங்கில் திணறிய போது அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
அந்த சமயத்தில் இந்தியாவிற்காக சதமடித்த ராகுல், வெளிப்புற விமர்சனங்கள், சத்தங்கள் என் காதில் விழுவதில்லை என்கிற வகையில் இரு காதுகளையும் அடைத்து சதத்தை கொண்டாடினார்.
அதன்பின்னர் ஒவ்வொருமுறையும் சதத்தை அந்த முறையிலேயே கொண்டாடுகிறார். இந்நிலையில், சதமடித்த பின் ஏன் ராகுல் இப்படி கொண்டாடுகிறார் என்று புரியவில்லை என சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறுகையில், "ராகுல் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. சதமடித்த பின், வெளிப்புற சத்தங்களை புறக்கணிக்கும் வகையில் செய்கை செய்கிறார்.
சதமடித்த ஒரு வீரரை பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து பாராட்டத்தான் செய்வார்கள். சதமடித்த வீரர் அந்த கைதட்டல்களையும், பாராட்டுகளையும் காது கொடுத்து கேட்டு மகிழ வேண்டும்.
அவர்கள் உங்களுக்குத்தான் கைதட்டுகிறார். ஆனால் அப்போது ஏன் அவர் இப்படி செய்கிறார் என்பது எனக்கு புரியவில்லை" என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story