முகமது சமி மீது கோபம் அடைந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர்
சமி கேட்சை பிடிக்க முயலாததால் ஹர்திக் பாண்டியா அவர் மீது கோபம் அடைந்தார்.
மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் குஜராத் - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது சீனியர் வீரரான முகமது சமி மீது குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கோபத்தை வெளிப்படுத்தினார். ராகுல் திரிபாதி கொடுத்த கேட்சை பிடிக்க டீப்தேர்ட்மேன் பகுதியில் இருந்த சமி பெரிதாக முயற்சி செய்யவில்லை.
பந்தை பவுண்டரி செல்ல விடாமல் அவர் தடுத்தார். சமி அந்த கேட்சை பிடிக்க முயலாததால் ஹர்திக் பாண்டியா அவர் மீது கோபம் அடைந்தார்.
இதை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூத்த வீரர் முகமது சமி மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஹேடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாத்தியூ ஹேடன் கூறுகையில், "பாண்டியா நல்ல வேகத்தில் பந்துவீசினார், போட்டியில் அது மிகவும் முக்கியமான தருணம் என்று நான் கருதுகிறேன். பவுண்டரி எல்லையில் இருந்த முகமது ஷமி பந்தை பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் சமி வேண்டும் என்றே கேட்சைத் தவிர்த்தார் என்று நான் கூறமாட்டேன்.
ஆனால் குறைந்த ரன்களை எதிரணிக்கு நிர்ணயித்திருக்கும் போது உங்கள் அணியின் சக வீரரின் உழைப்பிற்காக நீங்கள் இது போன்ற கேட்ச்களை பிடிக்கவேண்டும் " என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story