டி20 உலக கோப்பை; பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


டி20 உலக கோப்பை; பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 24 Oct 2021 5:38 PM GMT (Updated: 24 Oct 2021 5:48 PM GMT)

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

துபாய்,

7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிய போட்டி இதுவாகும். இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஷகத் கான் வீசிய பந்தை தூக்கி அடித்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து ஹசன் அலி வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா(13 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களை விரட்டியதன் மூலம் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் டி 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஷகீன் அப்ரிடி வீசிய 19-வது ஓவரில், விராட் கோலி 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகளை விளாசி 11 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணியில் ஷகீன் அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளும், ஷகத் கான் மற்றும் ஹரிஸ் ரவுஃப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.  பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய அந்த அணி 15 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்தது.  ரிஸ்வான் 56, ஆசம் 62 ரன்கள் எடுத்திருந்தனர்.  இருவரும் அரை சதம் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்துள்ளது.  ஆசம் (68) மற்றும் ரிஸ்வான் (78) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.


Next Story