விஜய் நினைத்தது நடக்க வேண்டும் - நடிகர் ராகவா லாரன்ஸ்


விஜய் நினைத்தது நடக்க வேண்டும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
x

நடிகர் விஜய் அரசியலில் நினைத்தது எல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் எனப் பயணித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கிறார். மேலும் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இதனிடையே விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் தனது தம்பி எல்வின் மற்றும் குடும்பத்தினரோடு திருப்பதி ஏழுமலைக் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு அங்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் லாரன்ஸ். அவர் பேசுகையில், "என்னுடைய தம்பி புல்லட் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். அதனுடைய வசன காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இதில் நானும், ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நல்லபடியாக முடிந்துவிட்டது. அதனால் தம்பியை அழைத்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கிறேன். அதே போல் நான் செய்து வரும் சமூக சேவை மாற்றம் பணிகளும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் சாமிதான் காரணம். அதனால் சாமிக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்" என்றார்.

பின்பு அவரிடம் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்தது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் எனப் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்" என்றார். அவரிடம் சண்முகப் பாண்டியன் படம் தொடர்பான கேள்விக்கு, "அந்த படத்தின் இயக்குநர் இது பற்றிப் பதிலளிப்பார்" என்றார். அங்கிருந்த ரசிகர்களுடன் ராகவா லாரன்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

'சேவையே கடவுள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியுள்ளார்.




Next Story