2-வது முறையாக மனைவியை திருமணம் செய்த பிரபல நடிகர்..!! என்ன காரணத்திற்காக...?


2-வது முறையாக மனைவியை திருமணம் செய்த பிரபல நடிகர்..!! என்ன காரணத்திற்காக...?
x

கேரளாவில் பிரபல நடிகரான சுக்கூர் தனது மனைவியை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

காசர்கோடு,


கேரளாவில் வழக்கறிஞர் மற்றும் பிரபல நடிகராக இருந்து வருபவர் சி. சுக்கூர். நா தான் கேஸ் கொடு (முடியுமென்றால் என் மீது வழக்கு தொடு) என்ற மலையாள படத்தில் வழக்கறிஞராக நடித்து கவனம் ஈர்த்தவர்.

இவரது மனைவி ஷீனா. மகாத்மா காந்தி பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆவார். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தில், காசர்கோடு மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் வைத்து சுக்கூர் தனது மனைவியை நேற்று சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

முஸ்லிம் தம்பதியான இவர்களது இந்த திருமண நிகழ்ச்சியில் அவரது 3 மகள்களும் சாட்சியாக கலந்து கொண்டனர். இதற்கு கேரளாவில் உள்ள பிரபல சன்னி பிரிவு உயர் கல்வி மையம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 2-வது திருமணம் ஒரு நாடகம் என்றும் தனது சொத்தில் ஒரு பகுதி, மரணத்திற்கு பின்னர் சகோதரர்களுக்கு போய் விட கூடாது என்ற குறுகிய மனப்பான்மையுடன் அவர் செயல்பட்டு உள்ளார் என எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஏனெனில், முஸ்லிம் தனிநபர் சட்டங்களின்படி ஆண் வாரிசு இல்லாத நிலையில், சுக்கூரின் சொத்துகளில் 3-ல் இரண்டு பங்கு மட்டுமே அவரது மகள்களுக்கு கிடைக்கும். மீதமுள்ள பங்கு சுக்கூரின் சகோதரர்களுக்கு சென்று விடும்.

எனினும், தனது முடிவு எந்தவொரு மத நம்பிக்கைகளையும் அவமதிப்பு செய்வதற்கான நோக்கம் கொண்டது அல்ல என்றும் வலுவாக எதிர்ப்பதற்கான அவசியமும் இல்லை என்றும் பேஸ்புக்கில் சுக்கூர் தெரிவித்து உள்ளார்.

இந்த தம்பதியின் முடிவுக்கு சமூக ஊடகத்தில் ஆதரவும் கிடைத்து வருகிறது. பிரபல திரைப்பட ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி வெளியிட்ட பதிவில், நாட்டில் ஒவ்வொரு சுதந்திர மனிதருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்து உள்ளது.

அவரது 2-வது திருமணத்தின்போது என்னால் உடன் இருக்க முடியவில்லை. ஆனால், அவர் தைரியமுடன் எடுத்த முடிவிற்காக அவருக்கு துணையாக நான் இருக்கிறேன். உங்களுக்கும், புதிதாக திருமணம் செய்து கொண்ட உங்களது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு அக்டோபரில் தனது மனைவியை கரம்பிடித்த சுக்கூர், மகள்களின் எதிர்கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, 29 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியை மீண்டும் 2-வது திருமணம் செய்து உள்ளார்.


Next Story