'தேஜாவு' இயக்குனரின் 'தருணம்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது..!


தேஜாவு இயக்குனரின் தருணம் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது..!
x

'தேஜாவு' இயக்குனரின் 'தருணம்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.

சென்னை,

'தேஜாவு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்நிலையில், 'தருணம்' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது, கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்த படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்த கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும் என்று பேசினார்.

மேலும், நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது, நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலில் இருந்தே இந்தப்படத்தை பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரோமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும். நன்றி என்று பேசினார்.


Next Story