தென்காசி அருகே தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் - குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் பரபரப்பு


தென்காசி அருகே தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் - குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் பரபரப்பு
x

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று அந்த பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கிய போது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்கான உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறையினரிடம் படக்குழுவினர் முறையாக பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குண்டுவெடுப்பு காட்சி படமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மதுரையில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.




Next Story