சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை


சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை
x
தினத்தந்தி 28 July 2024 7:31 AM GMT (Updated: 28 July 2024 9:15 AM GMT)

சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை,

பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேலாங்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 53). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அவ்வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து, 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்த பின், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் எழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் ஆகாமல், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் டேங்கரே பிரவீன் உமேஷ் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேசினார். அப்போது, குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர், பா.ஜ.க. பிரமுகரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story