வங்காளதேசம் அபார பந்துவீச்சு... 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்

வங்காளதேசம் வெற்றி பெற 30 ரன்களை இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது

Update: 2024-08-25 09:41 GMT

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. சாத் ஷகீல் (141 ரன்), முகமது ரிஸ்வான் (171 ரன்) சதம் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச  அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி, குர்ரம் ஷஜாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் அடித்திருந்தது. அப்துல்லா ஷபிக் 12 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் வெற்றி பெற வெறும் 30 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 51 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்