நீங்கள்தான் பெரிய பிராட்மேன் அல்லவா? - பாபர் அசாமை விளாசும் பாசித் அலி

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

Update: 2024-08-26 10:41 GMT

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்களும், வங்காளதேச அணி 565 ரன்களும் குவித்தன.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணிக்கு 30 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பாபர் அசாம் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். அதே போல 2வது இன்னிங்சில் 22 ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமானார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் டான் பிராட்மேனாக ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் போன்றவர்களுக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என்பதே மறந்து விட்டதாக முன்னாள் வீரர் பாசித் அலி வேதனையுடன் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நான் மிகவும் ஏமாற்றமாக உணர்கிறேன். இந்த தோல்வி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் அல்லது வங்காளதேசம் உங்கள் மீது ஏதோ மேஜிக் செய்து விட்டது அல்லது பிட்ச் ஏதோ சதி செய்து விட்டது என்பது போல் இருக்கிறது. இத்தனைக்கும் நீங்கள் பெரிய பிராட்மேன் அல்லவா? ஐசிசி தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாபர் அசாம் கேட்ச் தவற விட்டபோது அதிர்ஷ்டத்தை பெற்றார். அதன் பின் நஹித் ரானா தன்னுடைய வேகத்தால் பாபர் அசாமை வீழ்த்தினார். கடைசியில் பந்து திரும்பி வரும் என்பதை எதிர்பார்க்காததுபோல் பாபர் அசாம் அவுட்டானார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்