கிருஷ்ணகிரி சம்பவம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சம்பவ வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-08-21 03:27 GMT

சென்னை,

சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி நிர்வாகம் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாணவிகளுக்கு தேசிய மாணவர் படை (என்.சி.சி) பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளது. இந்த போலி முகாமின் பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சிவராமன் என்பவர் 13 வயது மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மாணவிகளுக்கும் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் பாதிக்கப்படட மாணவிகள் புகார் கொடுத்த போது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் தனது பெற்றோரிடம் தெரிவித்த பிறகே, பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததன் காரணமாக இச்சம்பவம் வெளியே வந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவராமன், தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்ட 11 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி சிவராமன் போலியாக என்.சி.சி. ஆவணங்களை தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பல பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்று முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவரிடமும் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிவராமன், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் விரைந்து விசாரித்து உரிய தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மேலும் பலரை கைது செய்ய இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் தமிழக அரசையும், காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்