மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-02 07:17 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து, தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும்போது இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகின்ற நிலையில், தற்போது தமிழக மீனவர்களின் படகின்மீது இலங்கைக் கடற்படையின் கப்பல் வேண்டுமென்றே மோதி மீனவர் மலைச்சாமி உயிரிழந்துள்ளார், இரு மீனவர்கள் மாயமாகியுள்ளனர் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.

உயிரிழந்துள்ள மலைச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இலங்கை கடற்படையினரின் இந்தச் செயல் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் செயலாகும். ஒவ்வொரு முறை மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும்போதும் ஒருவிதமான அச்ச உணர்வுடனேயே தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

இலங்கை அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயல் ஒருவிதமான பதற்றத்தை தமிழக மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்தச் சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள இலங்கை அதிகாரிகளை நேரில் அழைத்து தனது கண்டனத்தை மத்திய வெளியுறவுத்துறை பதிவு செய்திருந்தாலும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும், இறந்த மீனவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும், மாயமான மீனவர் ராமச்சந்திரன் உடலினை மீட்டெடுத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும், யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் தேவைப்படின் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து உயரிய சிகிச்சையினை அளிக்கவும், இந்தப் பிரச்சனைக்கு இலங்கை நாட்டுடன் பேசி நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்