"நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்

ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார்.

Update: 2024-08-31 09:40 GMT

திருவனந்தபுரம்,

மலையாள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமானதைத் தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் மோகன்லால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மலையாள திரையுலகில் பல நடிகர்கள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தை குறை கூறுவது சரியல்ல. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்.. குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு இல்லை.

மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். பாலியல் புகார் தொடர்பாக அரசு தன் கடமையை செய்யும் என்று நம்புகிறேன். மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்பாதீர்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சினையில் இருந்து மலையாள திரையுலகை காக்க வேண்டும்.

வயநாடு போன்ற பேரிடர்களின்போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. பாலியல் புகார்கள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது" என்று அவர் கூறினார்.

பாலியல் புகார் தொடர்பாக நடிகர் மோகன்லால் பேசியதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய மோகன்லால், " நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து நான் எப்படி பேச முடியும்.? பாலியல் புகார் தொடர்பாக அரசும், நீதிமன்றமும் தங்கள் கடமையை செய்கின்றன. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. விசாரணைக்கு ஒத்துழைப்போம். விசயங்களைச் சரி செய்ய மட்டுமே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நான் ஹேமா கமிட்டியின் அறிக்கையைப் படிக்கவில்லை.

மலையாள திரைதுறையை சார்ந்த 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மாவை மட்டும் குறை கூற வேண்டாம். தயவு செய்து இண்டஸ்ட்ரியை அழிக்காதீர்கள். ஹேமா கமிட்டியின் அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பாலியல் குற்றச் சம்வங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள், விசாரணை நடந்து வருகிறது" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்