பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுப்பதுபோல் ஆண்களுக்கு 2 மது பாட்டில் கொடுங்க... எம்.எல்.ஏ. கோரிக்கையால் சர்ச்சை
கலால் வரியை ரூ.40 ஆயிரம் கோடியாக அதிகரிக்க கர்நாடக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.;

பெங்களூரு,
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில், ரூ.36,500 கோடியாக இருக்கும் கலால் வரியை ரூ.40 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக, பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி. கிருஷ்ணப்பா பேசியதாவது:-
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை மூன்று முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால், ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், வரியை மீண்டும் உயர்த்தினால், எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது. மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம். அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மதுபாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு பதிலளித்த எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், 'நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, இதனை செய்யுங்கள். நாங்கள் மக்களை குடிக்க விடாமல் தடுத்து வருகிறோம்' என்றார்.