அரியானா சட்டசபை தேர்தல்: 11 பேர் கொண்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

அரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி தேதியாகும்.

Update: 2024-09-11 06:09 GMT

File image

புதுடெல்லி,

அரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது. இதனை தொடர்ந்து, நேற்று 9 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா வெளியிட்டார்.

இந்தநிலையில், ஆம் ஆத்மி தனது 3வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், அரியானா முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் பிரவின் குஸ்கானியை ஆம் ஆத்மி நிறுத்தியுள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில் 40 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி இதுவரை தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி தேதியாகும். 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. பொதுத்தேர்தலில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது, அதுவும் தோல்வியடைந்தது. கடந்த 2019 அரியானா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்