பொருளாதார ஆய்வறிக்கை 2024; நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணியளவில் மக்களவையிலும், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும்.

Update: 2024-07-22 03:10 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இதில், மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.

இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இதனை தொடர்ந்து, அதன் மீது விவாதம் நடைபெறும். எனினும், இந்த கூட்டத்தொடரில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தின ஆவணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இதன்படி, 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணியளவில் மக்களவையிலும், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும். இதனை தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவார்.

நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகார துறைக்கான பொருளாதார பிரிவு சார்பில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, தலைமை பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையின் கீழ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையானது, பொருளாதார நிலையை பற்றிய ஆழ்ந்த உள்நோக்கு பார்வையை கொண்டிருப்பதுடன், 2023-24 (ஏப்ரல்-மார்ச்) நிதியாண்டிற்கான பல்வேறு காரணிகள் மற்றும் நடப்பு ஆண்டுக்கான சில வருங்கால எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள, பட்ஜெட் பற்றிய சில விசயங்களையும், வடிவங்களையும் இந்த ஆய்வறிக்கை உள்ளடக்கி இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்