பாலியல் துன்புறுத்தல் வழக்கு; ஆகஸ்டு 17-ல் ஆஜராக முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவு

ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஆகஸ்டு 17-ந்தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-07-29 21:01 GMT

சண்டிகார்,

அரியானா மாநில முன்னாள் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது தேசிய அளவிலான முன்னாள் வீராங்கனை மற்றும் ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பாலியல் புகார் கூறினார்.

சந்தீப் சிங், சமூக ஊடகம் வழியே தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்றும் தவறான முறையில் தன்னை தொட்டார் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை அறிக்கை அடிப்படையில், சந்தீப் சிங்குக்கு எதிராக சண்டிகாரில் உள்ள கோர்ட்டு குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளது.

சிங்குக்கு எதிராக 354, 354ஏ, 354பி, 506 மற்றும் 509 ஆகிய ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கோரிய அவரது வேண்டுகோளை கோர்ட்டு நிராகரித்தது. ஆகஸ்டு 17-ந்தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனினும், எந்தவித தவறும் செய்யவில்லை என சந்தீப் சிங் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

முன்னாள் வீராங்கனை அளித்த புகாரில், விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார். அதில், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன். அங்கு சென்றபோது, மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் என்னை அவரது வீட்டில் இருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்றார்.

என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார். உன்னை முதல் முறையாக பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என அவர் கூறினார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்றும் கூறினார்.

அவர் என் மீது வைத்த கையை தட்டிவிட்டேன். அவர் என் டி-ஷர்ட்டை கிழித்துவிட்டார். நான் அழுது கொண்டே இருந்தேன், உதவிக்காக சத்தம் போட்டேன். அவருடைய ஊழியர்கள் அனைவரும் இருந்தபோதிலும், யாரும் எனக்கு உதவவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறார்.

அரியானா பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில், 354, 354ஏ, 354பி, 342, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள போலீஸ் நிலையம் செக்டார் 26-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நிராகரித்த விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங், அப்போது முதல் மந்திரியாக இருந்த மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்து விட்டார்.

ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர், மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புகார் அளித்த பெண் பயிற்சியாளர் கூறினார்.

இந்த வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் பெண் பயிற்சியாளர் பேசும்போது, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. முழு விவரங்களையும் விரிவாக குழுவிடம் அளித்துள்ளேன்.

அரியானா முதல்-மந்திரி விசாரணையில் தாக்கம் ஏற்படுத்த முயல்கிறார். அவரது பேட்டியை கேட்டேன். சந்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசுகிறார். சண்டிகார் போலீசார் எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை.

ஆனால், அரியானா போலீசார் என் மீது அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடி உள்ளன. எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் போ. மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி தருகிறோம் என மிரட்டல் விடப்படுகிறது என்றும் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண் பயிற்சியாளர் தனது தந்தையுடன், அப்போது அரியானாவின் உள்துறை மந்திரியாக இருந்த அனில் விஜ் தங்கியிருந்த, அம்பாலாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி சந்தீப் சிங்குக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்