பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: சீன அணியிடம் இந்தியா தோல்வி

நேற்று நடந்த ஆட்டத்தில் சீன அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை வசப்படுத்தியது.

Update: 2023-04-13 20:51 GMT

தாஷ்கென்ட்,

பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. ஒருதலைபட்சமாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சீன அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை வசப்படுத்தியது.

இதன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ருதுஜா போசேல் 3-6, 5-7 என்ற நேர்செட்டில் ஜின்யு ஜியாங்கிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 5-7, 1-6 என்ற நேர்செட்டில் யூ யுனானிடம் வீழ்ந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி-வைதேகி ஜோடியும் தோல்வியை தழுவியது. முதல் 2 ஆட்டங்களில் தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்