ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி

உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-27 06:52 GMT

image courtesy; twitter/ @TheHockeyIndia

சலாலா,

ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

இந்த போட்டிதொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை துவம்சம் செய்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் மெகா வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் மகிமா சவுத்ரி 2 கோல்களும், அக்ஷதா தேகேலே, மரியனா குஜூர், ஜோதி, மோனிகா திபி மற்றும் அஜ்மினா குஜுர் தலா ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் தாய்லாந்து அணியுடன் இன்று மோத உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்