உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று; முதல் 4 வீரர்கள் அரைசதம்...யுஏஇ-க்கு எதிராக இலங்கை 355 ரன்கள் குவிப்பு...!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-19 10:59 GMT

Image Courtesy: @ICC

புலவாயோ,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னேவும், பதும் நிசாங்காவும் களம் இறங்கினர்.

இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில் திமுத் கருணாரத்னே 52 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குசல் மெண்டிஸ் களம் இறங்கினார். அவரும் தனது பங்குக்கு அரைசதம் அடித்தார்.

இதற்கிடையில் நிசாங்கா 57 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய சதீரா சமரவிகரமாவும் அரைசதம் அடித்தார். இந்நிலையில் குசல் மெண்டிஸ் 78 ரன், சமரவிக்ரமா 73 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 48 ரன், தசுன் ஷனகா 1 ரன், டி சில்வா 5 ரன், இறுதியில் அதிரடி காட்டிய ஹசரங்கா 12 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் முதல் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். இதையடுத்து 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்