மகளிர் ஆசிய கோப்பை: மந்தனா அதிரடி... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் அடித்தார்.

Update: 2024-07-19 16:14 GMT

image courtesy: twitter/@ACCMedia1

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ரேனுகா தாகூர் சிங், ஷ்ரேயங்கா படில் மற்றும் பூஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா - ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடிய மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ஷபாலி வர்மாவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வெறும் 14.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 109 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்