பரபரப்பான சூழலில் நியூசிலாந்து - இலங்கை முதலாவது டெஸ்ட்

ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Update: 2024-09-22 14:42 GMT

காலே,

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 90.5 ஓவர்களில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 35 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்திருந்தது. மேத்யூஸ் மற்றும் டி சில்வா தலா 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 275 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இலங்கை. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கான்வே 4 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த வில்லியம்சன் 30 ரன்களிலும், டாம் லதாம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரச்சின் ரவீந்திரா தனி ஆளாக போராட மறுமுனையில் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் அடித்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ள நிலையில், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த வேண்டும் இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்