நாடு திரும்பும் முன் ஆப்கானிஸ்தான் வீரர் செய்த நெஞ்சை தொடும் நிகழ்வு!

ஆப்கானிஸ்தான் 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

Update: 2023-11-12 14:16 GMT

image courtesy; AFP

அகமதாபாத்,

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளை பெற்றது. கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி வலுவான அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்து பாரட்டை பெற்றது.

அதே போல 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவையும் 91/7 என்று மடக்கி பிடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் மேக்ஸ்வெல் அதிரடியால் அதை நழுவ விட்டது. அதன் காரணமாக லீக் சுற்று வாய்ப்பு நழுவி போனாலும் 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்து பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர ஆசிய அணிகளை காட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கும் வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெற்றது.

இந்நிலையில் லீக் சுற்று முடிவடைந்து நாடு திரும்புவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அகமதாபாத் நகரில் தெருவோரத்தில் இருந்த சில ஏழைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். தீபாவளி நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரின் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சில ஏழைகளிடம் தம்மால் முடிந்த பணத்தை குர்பாஸ் கொடுத்துள்ளார்.

குறிப்பாக அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பாமலேயே அவர்களின் அருகில் 500 ரூபாய் தாள்களை வரிசையாக வைத்து விட்டு குர்பாஸ் சென்றுள்ளார். தீபாவளி தினத்தன்று சாலை ஓரத்தில் இருக்கும் ஏழைகள் பண்டிகையை கொண்டாடுவதற்கு தம்மால் முடிந்த சிறிய தொகையை அவர் எவ்விதமான விளம்பரமும் இன்றி வைத்து சென்றுள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அவரின் நல்ல மனதை பாராட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்