அதை செய்தால் மட்டுமே ஹர்திக் பாண்ட்யாவுக்கு 50 ஓவர் அணியில் இடம் - கம்பீர் நிபந்தனை

ஹர்திக் பாண்ட்யா கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

Update: 2024-07-19 11:15 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஹர்திக் பாண்ட்யா டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் (50 ஓவர்) தொடரில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை.

கடைசியாக கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்து இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் முழுமையாக 10 ஓவர்கள் வீசி தன்னுடைய பிட்னஸை நிரூபித்தால் மட்டுமே பாண்ட்யாவுக்கு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கம்பீர் நிபந்தனை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு:- "ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான 10 ஓவர்கள் வீசுவதை பார்க்க காத்திருப்பதாக தேர்வுக் குழு கூட்டத்தில் கவுதம் கம்பீர் நினைவூட்டினார். அதன் பின்பே வாய்ப்பு பற்றி பரிசீலனை செய்யப்படும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்