2வது டெஸ்ட் போட்டி; வங்காளதேசத்திற்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டும், நஹித் ராணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Update: 2024-09-02 10:25 GMT

Image Courtesy: AFP 

ராவல்பிண்டி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது நாள் ஆட்டத்தின் போது டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 274 ரன்னும், வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன.

12 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆஹா சல்மான் 47 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டும், நஹித் ராணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் பெற்ற 12 ரன் முன்னிலையுடன் சேர்த்து வங்காளதேசத்திற்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் தொடரை முழுமையாக கைப்பற்றலாம் என்ற நிலையில் வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. தற்போது தேநீர் இடைவேளை வரை வங்காளதேசம் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்