900 கோவில்கள் அமைந்த அதிசய மலை

குஜராத் மாநிலத்தில் உள்ள பலிதானா என்ற இடத்தில் இருக்கிறது, ஷத்ருஞ்ஜய் என்ற மலை. இந்த மலையின் மேல் சுமார் 900 ஆலயங்கள் அமைந்திருக்கிறது.

Update: 2022-04-26 12:48 GMT
ஆலயங்கள் அனைத்துமே சுமார் 900 ஆண்டுகள் முற்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பு. ஒரே இடத்தில் அமைந்த இந்த ஆலயங்களைப் பார்ப்பதற்காகவே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.



ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில், பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் பலரும், சமாதி நிலையை எய்தியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள கோவில்கள் பலவும் மார்பிள் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மலைக்கோவிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்று கூறப்பட்டுள்ளது. ஆதிநாத்தின் சிலை 7 அடி உயரத்தில் நான்கு தலைகளுடன் காட்சியளிக்கிறது.

இங்குள்ள கோவில்கள், கடவுளர்கள் அனைவரும் வகிக்க வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரவில் அனைத்துக் கடவுளர்களும் இங்கு உறங்குவதாக ஐதீகம். இதனால் கோவில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்கவேண்டும். மோட்சம் வேண்டுவோரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பவும் இந்த கோவிலை ஒருமுறையாவது பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று ஜைன புனித நூல்கள் கூறுகின்றன.

ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது புனித தலமாகும். வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த மலைக் கோவிலுக்குச் செல்வது புண்ணியம் என்று கருதப்படுகிறது. ஆதிநாத், குமர்பால், விமல்ஷா, சம்ப்ரதிராஜா, சவுமுக் ஆகியவை இங்குள்ள ஜைன மதக் கோவில்களில் குறிப்பிடத்தக்கவை. மொத்தம் 900 கோவில்களும் 18 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே அமைந்துள்ளன.

1618-ம் ஆண்டு கட்டப்பட்ட சவுமுக் கோவில் இங்குள்ள மிகப்பெரிய கோவிலாகும். 13-ம் நூற்றாண்டின் தேஜ்பால் மற்றும் விஷுபால் சகோதரர்கள், இந்த மலைக்கோவிலுக்கு செல்ல கல் பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்தக் கோவில்களில் உள்ள விக்கிரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளிப்படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும், அதனை அந்தக் குருக்கள் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசாக நினைத்து எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் வேறு வேறு தல புராணங்கள் உள்ளன.

மேலும் செய்திகள்