உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினை மோடி சமாதானப்படுத்த முடியும் - அமெரிக்கா நம்பிக்கை

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதினை பிரதமர் மோடி சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Update: 2023-02-11 03:47 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 353-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கை வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைன் - ரஷியா இடையேயான போரை இந்திய பிரதமர் மோடி நிறுத்துவதற்கான நேரம் தாண்டிவிட்டதா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர், ரஷிய அதிபர் புதின் இந்த போரை நிறுத்த இன்னும் நேரம் உள்ளது. அதிபர் புதினை பிரதமர் மோடி சமாதானப்படுத்த இன்னும் நேரம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். போரை நிறுத்த என்னென்ற முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை பிரதமர் மோடி எடுக்க அவரிடமே விட்டுவிடுகிறேன். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்