தொழிலாளி வெட்டிக்கொலை

ராஜபாளையம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-08 21:18 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் இருளப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24), முருகேசன் (21), பாலமுருகன் (19), சூரிய பிரகாஷ் (24), இவருடைய சித்தப்பா குருசாமி (48).

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி, முருகேசன், பாலமுருகன் ஆகியோருக்கும் குருசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்கள் சமாதானம் ஆகி சென்றதாகவும் கூறப்படுகிறது. சூரியபிரகாஷ் நாகர்கோவிலில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

தகராறு

இந்தநிலையில் வெளியூரில் இருந்த சூரியபிரகாஷ் ஊருக்கு வந்தார். அப்போது குருசாமி, சூரிய பிரகாசிடம் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ், கருப்பசாமி உள்ளிட்ட 3 பேரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கருப்பசாமி உள்பட 3 பேர் சேர்ந்து சூரியபிரகாஷ் வீட்டிற்கு கத்தி மற்றும் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். அவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

வெட்டிக்கொலை

பின்னர் குருசாமி, சூரியபிரகாஷ் ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் இருளப்பசாமி கோவில் தெரு அருகே சென்று கொண்டு இருந்த போது முகமூடி அணிந்த வந்த 3 பேர் மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் சூரியபிரகாசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதனை தடுக்க வந்த குருசாமிக்கும் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சூரியபிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சூரியபிரகாசின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குருசாமியையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கருப்பசாமி, முருகேசன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சூரியபிரகாசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முகவூரில் பதுங்கி இருந்த கருப்பசாமி உள்பட 3 பேரை தளவாய்புரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்