குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-19 19:49 GMT

சாலை மறியல்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் மலையப்பா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதி அடைந்து வந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை புதுக்கோட்டை-மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மரக்கட்டைகளை சாலையின் நடுவே போட்டு போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்