வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

தோட்டக்குடி வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-08-29 16:15 GMT

திட்டச்சேரி:

தோட்டக்குடி வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என

விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தோட்டக்குடி வாய்க்கால்

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களில் உள்ள சுமார் 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த வாய்க்காலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

பயிர்கள் கருகும் நிலை

இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளைநிலங்களுக்கு செல்லாமல் இருக்க மண்ணை வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் குறுவை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்

இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி முடிகொண்டானாற்றில் கலந்து வீணாகிறது.இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து தோட்டக்குடி வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்