அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? - தலைமை நீதிபதி தகவல்

புகார் மனுவை பரிசீலித்தும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-03 12:27 GMT

கோப்புப்படம்

சென்னை,

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்குகளை நாளை முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்கள். அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும் வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்தும், சம்பந்தப்பட்ட தனி நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என்றும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்