காட்டு பன்றிகள் அட்டகாசம்; 500 வாழைகள் நாசம்

களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசம் காரணமாக 500 வாழைகள் நாசமானது.

Update: 2022-11-03 21:16 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தன. இதனை பார்த்த விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு பன்றி கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர். மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து அவர்கள் பின்வாங்கினர். அதற்குள் காட்டு பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன. இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரைட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குட்டி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்