ஒட்டுக்குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பால் ராஜவாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பால் ராஜவாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளத்தின் தொடக்கப்பகுதியில் உள்ள ஷட்டர் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் பீரிட்டு வெளியேறுகிறது.

Update: 2022-11-14 18:40 GMT

உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பால் ராஜவாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளத்தின் தொடக்கப்பகுதியில் உள்ள ஷட்டர் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் பீரிட்டு வெளியேறுகிறது.

ஏழுகுளம் பாசன பகுதி

உடுமலையில் இருந்து திருமூர்த்தி அணை வரை உள்ள பகுதிகளில் ஏழுகுளம் என்று அழைக்கப்படும் குளங்கள் அடுத்தடுத்து உள்ளன. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த 7 குளங்களுடன் இந்த திட்டத்திற்குட்பட்ட மேலும் 2 குளங்கள் சேர்ந்து மொத்தம் 9 குளங்களுக்கு தண்ணீர் விடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த குளங்களுக்கு எவ்வளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படவேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்படுமோ அந்த அளவிற்கான தண்ணீர், விவசாயிகளின் தேவையைப்பொறுத்து அவ்வப்போது, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திறந்து விடப்படும்.

அதன்படி திறந்துவிடப்பட்ட தண்ணீர், தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு தற்போது குளத்து தண்ணீர் தேவைப்படாது என்பதால் குளங்களில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

ஒட்டுக்குளம்

இந்த குளங்களில் உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டியுள்ளது ஒட்டுக்குளம். இந்த குளத்திற்குள் கரைப்பகுதியில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த குளம் நிறைந்தால் உபரிநீர் குளத்தின் முதல் பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக தங்கம்மாள் ஓடையிலும், குளத்தின் கடைசி பகுதியான சுண்டக்காம்பாளையம் அருகில் உள்ள 2 ஷட்டர்கள் வழியாக ராஜவாய்க்காலிலும் திறந்து விடப்படும்.

10 அடி உயரம் உள்ள இந்த ஒட்டுக்குளம் 14.11 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இந்த குளத்தில் நேற்று 8.50அடி உயரத்தில் மொத்தம் 9.50 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.

இந்த குளத்தில், உபரிநீர் தங்கம்மாள் ஓடைக்கு செல்வதற்கான பகுதியில் உள்ள ஷட்டரின் கீழ்பகுதி சிறிது துருபிடித்த நிலையில் பழுதடைந்து ஓட்டையாகி உள்ளது. இந்தகுளத்தில் இருந்து தங்கம்மாள் ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படாதநிலையில், அந்த ஓட்டை வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறி தங்கம்மாள் ஓடைக்கு செல்கிறது. மேலும் மற்றொரு இடத்திலும் உள்ள சிறிய ஓட்டை வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது.

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு

உடுமலையின் தெற்கு பகுதியில் பெய்த பலத்த மழையினால் காட்டாற்று வெள்ளம், ஓடை வழியாக ஒட்டுக்குளத்திற்கு வந்துகொண்டுள்ளது.

அதனால் மீண்டும் பலத்த மழை பெய்தால் இந்த குளத்திற்கு கூடுதலாக தண்ணீர் வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுண்டக்காம் பாளையம் அருகில் உள்ள 2 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ராஜவாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்கு சென்று சேரும்.

Tags:    

மேலும் செய்திகள்