விஜய் வசந்த் எம்.பி. பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - போலீஸ் கமிஷனரிடம் மனு

விஜய் வசந்த் எம்.பி. பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்

Update: 2023-06-22 01:09 GMT


காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் பூ.நல்லமணி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளராக உள்ளேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்வின் போது, சில விஷயங்களை பேசினார். அதன் தொடர்ச்சியாக, அவரது அரசியல் வருகை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. ஏழைகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் நடிகர்கள் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜயை இணைக்க தயாராக இருப்பதாகவும், அதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில் விஜய் வசந்த் எம்.பி.யின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் அவர் மீதான அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வை சேர்ந்த சுரேஷ் என்பவரின் முகநூல் பக்கத்தில் விஜய் வசந்த் எம்.பி. குறித்து தகாத வார்த்தைகளில் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியின்போது மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நியாமத் இப்ராகிம் சபி, பறக்கும் படை பாலு, ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்