பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு - மன்னிப்பு கோரினார் மத்திய மந்திரி ஷோபா

வழக்கு விசாரணையை நாளை மறுதினம் ஒத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-03 12:27 GMT

சென்னை,

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டு மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலஜே சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்..

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். முதல்-அமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறினார்.

இந்ந வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய இணை மந்திரி ஷோபா சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை மறுதினம் ஒத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்