தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை

சிவகங்கை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது. கிலோ ரூ.120-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் தக்காளிகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2023-08-01 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது. கிலோ ரூ.120-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் தக்காளிகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை விட தக்காளி விலை அதிகமாக காணப்பட்டது. தற்போது வரை தக்காளிக்கு மவுசு இன்னும் குறையவில்லை. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தக்காளி விலை உயர்வால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும், சமையலுக்கு தக்காளிகளை பயன்படுத்துவையே தவிர்த்து வந்தனர்.

தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இன்னும் அதன் விலை குறைந்தபாடில்லை. இதற்கிடையே மலிவு விலையில் தக்காளிகளை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி உழவர் சந்தைகளில் தக்காளிகளை விற்க ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால் போதிய அளவு தக்காளி உற்பத்தி இல்லை. இதன் காரணமாக தக்காளி வரத்தும் போதிய அளவு இல்லாததால் உழவர் சந்தைகளில் தொடர்ந்து மலிவு விலையில் தக்காளிகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து சதம்

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் தக்காளிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. அதாவது கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி நேற்று பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்டமாக ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இருப்பினும் சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளி விலை சதமடித்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் தக்காளிகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்