திருவதிகை பெரியநாயகி அம்மன் தேரோட்டம்

திருவதிகை பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-07-30 16:39 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய நாயகி அம்மன் தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் பெரியநாயகி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பெரிய நாயகி அம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஓம் சக்தி, ஓம் சக்தி என்கிற கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில் பண்ருட்டி நகர சபை தலைவர் ராஜேந்திரன், எல்.ஆர். பாளையம் சபாபதி செட்டியார், கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெரியநாயகி அம்மனுக்கு வளையலணி விழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்