திருஉத்தரகோசமங்கை கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

திருஉத்தரகோசமங்கை கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-05-03 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மங்களநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவின் 8-வது நாளில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று மாலை மங்களநாதர் மற்றும் மங்களநாயகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பாள் சன்னதி எதிரே உள்ள மணமேடைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி அம்பாளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்ச்சியில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்