தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல் உள்ளார்.

Update: 2022-06-27 07:58 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும். சிறுமிகள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என எந்த மகளிருக்கும் பாலியல் தொந்தரவு ஏற்படக்கூடாது. ஆனால் அவ்வப்போது மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.

மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்ற செய்தியானது பெற்றோர்களுக்கு கவலை அளிக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசு, தயவு தாட்சணை பார்க்காமல் தவறு செய்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிக்க திண்டுக்கல், தர்மபுரி, தேனி, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே போக்சோ வழக்குகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியம் நீதிமன்றத்துக்கும் உண்டு.

மேலும் தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்த இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்