அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு

மத்தூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணம், நகையை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-07 18:45 GMT

மத்தூர்

மத்தூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணம், நகையை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்மன் கோவில்

மத்தூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை ஊர் பொது மக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அம்மனுக்கு அணிவித்திருந்த 3 பவுன் தங்க தாலி திருட்டு போனது தெரியவந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளிப்பொருட்கள், பணம், பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவைகள் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது 2 பேர் பூட்டை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களை வலைவீசி வருகின்றனர். அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்